சனி, 27 பிப்ரவரி, 2021

மார்க்சியம் பயில்வோம் 2

                     மார்க்சிய படிப்பு வட்டம்

                           செங்கொடி மையம்

                                வகுப்பு எண்: 19

                                 நாள்: 13-02-2021


                அரசியல் பொருளாதாரம்

                     கூலி – விலை – லாபம்

அறிமுகம்:

மார்க்சியம், மனித சமுதாய விஞ்ஞானமாக பரிணமித்து மெய்ஞானம், பொருளாதாரம், அரசியல், வரலாறு, இயற்கையியல் என அனைத்து சமூகத்துறைகளிலும் இயக்கவியல் பொருள்முதல் கோட்பாடுகளை அடிப்படை நெறியாக்கியது.

மனித சமூக வாழ்வியலில், பொருளாதாரமே அடிப்படை எனும் வகையில், உற்பத்தி முறையையும் உற்பத்தி உறவுகளையும் அவற்றைக் கட்டமைத்து வழிநடத்தும் அரசையும் சமூக வாழ்முறையையும் வாழ்நிலையையும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், தனது அனைத்து கருத்தாக்கங்களிலும் செயலூக்கங்களிலும் வழிகாட்டுதல்களிலும் விளக்குவதை நெறியாகக் கொண்டுள்ளது.

இயற்கையோடு இணைந்த மானுட மேன்மை எனும் மைய நோக்குநிலையில், பொருளாதாரத்தை, அரசியல் அதிகாரத்தோடு இணைத்து, அனைத்து உழைக்கும் மக்களின் சமுதாய மேம்பாட்டையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் முன்னோக்கிச் செலுத்துவதை மார்க்சியம் தனது இயக்கும் கோட்பாடாகக் கொள்கிறது.

மார்க்சிய அணுகுமுறையில், அரசியல் பொருளாதார பகுப்பாய்வும் சமூக வரலாற்று ஆய்வுகளும் வர்க்கப் போராட்டத்தையும் பாட்டாளி  வர்க்க சர்வாதிகாரத்தையும் முன்வைப்பதால், “மூலதனம்”, “உழைப்பு” ஆகிய இரண்டும் இரு எதிரெதிரான வர்க்கங்களை அடையாளப்படுத்துகின்றன.

“மூலதனம்” என்பது உற்பத்திக்குத் தேவையான அடிப்படைகளை அதாவது, “உற்பத்திச் சாதனங்களை” (MEANS OF PRODUCTION) “உடைமை”யாகக் கொள்வதைக் குறிக்கிறது. “உழைப்பு” என்பது சுதந்திரமான கூலித் தொழிலாளர்களை (FREE WAGE LABOURERS), “பாட்டாளி”களைக் குறிக்கிறது.

“மார்க்சிய பொருளாதார போதனை என்பது நவீன சமுதாயத்தின் இயக்கத்திற்குரிய பொருளாதார விதிகளை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். “மூலதனம்” நூலின் இறுதியான நோக்கம் இதுவே” என தோழர் லெனின் மொழிகிறார்.

அவர் மேலும் தொடரும்போது, “வரலாற்றின் வழியே வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வதுதான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம்” என்கிறார்.

“முதலாளித்துவ உலகில் ஆட்சி செலுத்துவது பண்ங்களின் உற்பத்திதான். எனவே, மார்க்ஸ், பண்டத்தைப் பரிசீலிப்பதிலிருந்தே தனது பகுப்பாய்வைத் தொடங்குகிறார்”.

- தோழர் லெனின்.

              கூலி – விலை – லாபம்

                                      - கார்ல் மார்க்ஸ்

கடந்த 18-ஆம் வகுப்பில், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள இரண்டு தலைப்புகளான,

1) உற்பத்தியும் கூலியும்;

2) உற்பத்தி, கூலி, லாபம் பற்றிப் படித்தறிந்தோம். அதன் சுருக்கம் கீழே வருகிறது.

.1) “ தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமும் நிலையான ஒன்று; மாறாத அளவும் மாறாத பரிமாணமும் கொண்டது”, என்றும்

.2) “மெய்யான கூலியின் அளவு – அதைக்கொண்டு வாங்க முடிகிற சரக்கின் அளவால் கணக்கிடப்படும் கூலியின் அளவு – மாறாத, நிலையான பரிமாணம் கொண்ட தொகையே”, என்றும்

.3) “தோழிலாளி வர்க்கம் போராடி, முதலாளி வர்க்கத்தை ₹40 மதிப்பிற்குப் பதிலாக, ₹50-ஐ பணக் கூலியாகக் கொடுக்கச் செய்தால், முதலாளியோ அதற்கு ஈடாக, விலையேற்றத்தின் மூலமாக, ₹50 மதிப்பிற்கான சரக்கிற்குப் பதிலாக, ₹40 மதிப்பிற்கான சரக்கையே தருவார். தொழிலாளி வர்க்கம், ₹40 கொடுத்து வாங்கிய சரக்கிற்குப் பதிலாக, ₹50-ஐக் கொடுத்து அதே அளவு சரக்கை வாங்கவேண்டும். ஏனென்றால், கூலியின் அளவு நிலையானது”, என்றும் 

.4) “ஒரு கிண்ணத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் சாப்பிடுவதற்கான சூப் குறிப்பிட்ட அளவு உள்ளது. அவர்கள் சாப்பிடும் கரண்டியின் உருவ அளவைப் பெரிதாக்குவதன் மூலம் சூப்பின் அளவு கூடிவிடாது”, என்றும்

.5) விவசாயத்தில் கூலியானது 100 சதவீதம் அதிகரிக்கப் போவதாவும் அதனால், விலைவாசி கடுமையாக உயரும் எனவும் இது இங்கிலாந்தில் நாசகார அழிவுகளையும் கூலியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் திரு. டேவிட் வெஸ்டன் முன்வைக்கிறார். இவை எந்த வகையிலும் கோட்பாட்டளவில் விளக்கப்பவில்லை; துணிபுரைகளாகவே முன்வைக்கப்பட்டன.

இவை அனைத்தையும் மார்க்ஸ் அவர்கள் அனுமானங்களாக்கி, தர்க்க ரீதியாகச் சான்றுகளை முன்வைத்துத் தகர்த்தெறிகிறார்.

குறிப்பாக,

                    “ தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமும் நிலையான ஒன்று” என்பதையும் “கூலியின் மொத்த அளவு நிலையான பரிமாணம் கொண்டதாவே இருக்கும்” என்பதையும் எடுத்த எடுப்பிலேயே பிழையானவை என நிராகரிக்கிறார். எவ்வாறெனில், நாமே எளிமையாக அறிந்தவகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி( GROSS DOMESTIC PRODUCE-GDP) எப்போதுமே ஆண்டுக்காண்டு கணக்கிட்டாலும் சராசரி வேலை நாட்களின் அடிப்படையில் கணக்கிட்டாலும் உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவும் தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கும். இந்த மாற்றத்திற்கான முக்கிய அம்சங்களாக, மார்க்ஸ் முன்வைப்பது,

1) மக்கள் தொகைப் பெருக்கம்;

2) தொடர்ந்த மூலதனத் திரட்டல்;

3) உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு.

மேலும், இவற்றில் ஒவ்வொன்றையோ அல்லது மொத்தமாக எல்லாவற்றையுமோ நிலையானதாக அனுமானித்தாலும் உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவு அன்றாடம் மாறும் தொழிற்சூழல்களாலும் சந்தை நிலவரங்களாலும் தொழிலாளர்களின் மாறும் ஈடுபாடு மற்றும் தேவைகளாலும் மாறியே ஆகவேண்டும்.

இதுபோலவே, உழைப்பின் கூட்டுமொத்தம் மாறவில்லை என்று அனுமானித்தாலும் அதன் பகுதிகளான, கூலியும் லாபமும் தங்களுக்குள் மாறக்கூடியவையே. எவ்வாறெனில், மாறாத உற்பத்திப் பொருளின் மதிப்பிற்குள் கூலி வீதமும் லாபத்தின் வீதமும் மாறிக் கொள்வதை உற்பத்தியின் வரம்பு கட்டுப்பத்தாது. உதாரணமாக, 100-ஆக உள்ள உற்பத்தியில், கூலி 60 ஆகவும் லாபம் 40 ஆகவும் கொண்டால் இந்த விகிதமே கூலி 50 ஆகவும் லாபம் 50 ஆகவும் மாறுவதை 100 எந்த விதத்திலும் தடுக்காது.

உற்பத்தியின் கூட்டு மொத்தம் போலவே கூலியின் மொத்த அளவு நிலையான பரிமாணம் கொண்டதாக இருக்காது.

இதை மேலும் தெளிவாக்க, நடைமுறையில் தொழிலாளர்கள் தங்களது கூலி உயர்வுக்காக, சங்கம் அமைத்துப் போராடிப் பெறுவதும் முதலாளி எப்போதும் தொழிலாளர்க்கான கூலி வெட்டைத் தற்காலிகமாகவேணும் தொடர்ந்து செலுத்த முயல்வது கண்கூடு. 

“ஒவ்வொரு கூலி வெட்டுக்கும் எதிரான போராட்டம் என்பது கூலி உயர்வுக்கான போராட்டமே!

இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, உற்பத்தியும் கூலி உயர்வும் கூலி வெட்டும்கூட முதலாளியின் விருப்பத்தாலோ, தொழிலாளியின் விருப்பத்தாலோ நிகழ்கிறது என்று அனுமானித்தாலும் இது இவர்களது விருப்பத்திற்கு எதிராகவும் நிகழ்வதும் சாத்தியம்தானே! மேலும், கூலியானது உற்பத்தி குறைந்த அமெரிக்காவில் கூடுதலாகவும் ஒப்பீட்டளவில் உற்பத்தி நிறைந்த இங்கிலாந்தில் குறைவாக இருப்பதும் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சிலும் இங்கிலாந்திலும் வேறு வேறாக இருப்பதையும் மார்க்ஸ் தர்க்கமாக்குகிறார்.

அவ்வாறே, முதலாளிகளின் விருப்பம் – உற்பத்தி முறையும் உற்பத்தி உறவுகளும் ஒரே விதமாக, முதலாளித்துவ முறையில் இருக்கும் நாடுகளுக்கு இடையில் – நாட்டுக்கு நாடு மாறுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார். விருப்பத்தின் அடிப்படை என்பதற்கு நியாயம் கற்பிக்க,  விருப்பத்திற்கு அப்பாலும் செல்லவேண்டி இருக்குமென்றும் விருப்பத்திற்கு, இறைவனின் சித்தத்தை முன்வைப்பார்களேயானால் அது முடிவற்ற, தெளிவற்ற, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மூட நம்பிக்கை நோக்கியே செல்லும் என்பதால் இதனை பகுத்தறிவாளரான வெஸ்டனே ஏற்கமாட்டார் என நிறுவுகிறார்.

இறுதியாக, கம்யூனிஸ்டு அகிலத்தின் வேலை என்பது, முதலாளிகளின் விருப்பத்தைப் பேசிக்கொண்டிராமல், ஏனென்றால், அவர்களது விருப்பம் எப்போதுமே, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்பதை உறுதி செய்துகொண்டு, முதலாளியின் அதிகாரம் பற்றியும் அந்த அதிகாரத்தின் வரம்புகள் பற்றியும் அந்த வரம்புகளின் தன்மை பற்றியும் கேள்வி எழுப்புவதே என மார்க்ஸ் ஆணித்தரமாக வாதிடுகிறார்.


அடுத்ததாக, உற்பத்தி, கூலி, லாபம் என்ற பிரச்சினையில், மாறாத கூலி வீதத்தை நிறுவ, முதலாளி தனது பொருளின் சந்தை விலையை அதிகரிப்பதைக் காரணம் காட்டும்போது, மார்க்ஸ் அவர்கள், “கூலியின் அடிப்படை விலையை நிர்ணயிப்பது எது? என கேள்வி எழுப்புகிறார்.

தற்போதைய கூலி, ₹40 என்பது ₹50-ஆக ஆகிறது என்ற அதிகரிப்பிற்கு மாறும்போது, ₹40 சரக்கு ₹50-ஆக உயர்த்தப்பட்டுவிடுகிறது என்பதே அதற்காக முன்வைக்கப்படும் ஆதாரம். அப்படியானால், கூலியின் அடிப்படை ₹40-ஆக நிர்ணயிக்கப்பட்டது ஏன்? என்பதே அந்தக் கேள்வி. ஏன், அது ₹30-ஆகவோ, ₹20-ஆகவோ நிர்ணயிக்கப்படவில்லை. இது முதலாளியினதோ அல்லது தொழிலாளியினதோ விருப்பத்தின் அடிப்படையில் அல்ல என நிறுவப்பட்டபின் மார்க்ஸ் அவர்கள் முன்வைப்பது: “எந்தவொரு தருணத்திலும் உண்மையில் வழங்கப்பட்ட கூலித்தொகையானது எப்போதுமே துல்லியமாக, அவசியமாக வழங்கப்பட வேண்டிய கூலித்தொகைக்கு சமமாய் இருந்துள்ளது. அதிலிருந்து விலகிச் செல்லவில்லை” என்கிறார். அவ்வாறின்றி, “கூலித்தொகையின் வரம்பு வெருமனே முதலாளியின் விருப்பம் அல்லது பேராசையின் வரம்புகளைச் சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறது என்பது தன்னிச்சையான வரம்பாகும். அதில் அவசியமானது என்று ஏதுமில்லை.

தேசிய உற்பத்தி எனும் கிண்ணத்தில் நிரம்பியுள்ளள குறிப்பிட்ட அளவு சூப்பை,  அந்த உற்பத்தியில் ஈடுபட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் பகிரும்போது கூலி உயர்வு எனும் கரண்டியின் அளவைப் பெரிதாக்குவதன் மூலம் உற்பத்தி எனும் சூப்பின் அளவு மாறாது என்று வெஸ்டன் கூறுகிறார்.

உண்மையில், தொழிலாளர்கள் உண்ணும் கிண்ணம் தேசிய உழைப்பின் ஒட்டுமொத்த உற்பத்தியால் நிரம்பியிருக்கிறது என்பதையும் அதிலிருந்து தொழிலாளர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதை, கிண்ணம் சிறியதாக இருப்பதோ, அதிலுள்ள சூப்பின் பற்றாக்குறையோ அல்ல என்றும் அவர்களின் கரண்டியின் உருவ அளவு சிறிதாய் இருப்பதுதான் என்பதை வெஸ்டன் வசதியாக மறந்துவிட்டார்.

சரக்கின் விலை உயர்வு அல்லது பொதுவாகச் சொன்னால், சரக்குககளின் விலையில் ஏற்படும் மாற்றங்களோ முதலாளியின் விருப்பத்தை மட்டுமே சார்ந்தில்லாமல் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் தேவை. இல்லையெனில், சந்தை விலைகளில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமும் இடையறாத ஊசலாட்டங்களுக்கும் தீர்க்க முடியாத புதிர்களுக்கும் ஆளாகிவிடும் (இன்றைய பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளே இதற்கு சாட்சி).

உழைப்பின் உற்பத்தித் திறனிலோ, ஈடுபடுத்தப்படும் மூலதனம், உழைப்பு அளவிலுமோ, உற்பத்திப் பொருட்களின் மதிப்பைக் கணக்கிடும் பணத்தின் மதிப்பிலோ எந்தவித மாற்றமும் இல்லை என்று வைத்துக்கொள்ளும் போதும் கூலி உயர்வானது சரக்குககளின் சந்தை விலையைப் பாதிக்கிறது. இதற்கான சாத்தியக் கூறே அந்த சரக்குகளுக்கான தேவை(Demand) க்கும் அச்சரக்குகளின் பரிமாற்றத்திற்(Supply) கும் இடையே உள்ள உண்மையான விகிதப் பொருத்தமாகும். இது ஒரு குறிப்பீட்ட மற்றும் தற்காலிகமான சூழலே ஆகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 1) தொழிலாளி வர்க்கம் தனது வருமானத்தை அத்தியாவசியப் பொருட்களுக்காகச் செலவிடுகிறது; செலவிட்டே ஆகவேண்டும். எனவே, கூலிவீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வானது, அத்தியாவசியப் பொருட்களின் தேவையை அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்வோர் கூலி உயர்வுக்காக ஆன கூடுதல் செலவினை அவர்களது சரக்குகளின் சந்தை விலையை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டுகிறார்கள்.

.2) அத்தியவசியப் பொருட்களை உற்பத்தி செய்யாத, ஆடம்பரப் பொருட்களை உற்பத்தியோ இறக்குமதியோ செய்யும்  பெருமளவிலான முதலாளிகள் தங்கள் பொருட்களுக்கான தேவை குறைவதால் விலை வீழ்ச்சியையும் லாபக் குறைவையும் சந்திக்க வேண்டும். இவர்கள் வீழ்ச்சியடைந்த லாபத்தைக் கொண்டே, விலை அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களுக்குச் செலவிட வேண்டும். மேலும், முதலாளிகளின் சேவகர்களாக உள்ள அடியாட்கள் மற்றும் குதிரைகள்,  செல்லப் பிராணிகள் இன்னபிறவற்றிற்காக சாதரண நாட்களில் விரயமாக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் அளவு விலை ஏற்றத்தினால் கட்டுப்படும். மொத்தத்தில், தொழிலாளரின் பொதுவான கூலி உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதால், முதலாளிகளும் ஆடம்பரச் செலவுகளை செய்ய இயலாது. எனவே, 

3) தொழிலாளர்களின் வாங்கும் சக்தியில் ஏற்படும் உயர்வால், முதலாளிகளின் லாப சரிகட்டல்களைத் தாண்டியும் அவர்களது லாப வீழ்ச்சிக்கே வித்திடும். இப்படித்தான், ஒருபுறம் ஏற்படும் லாப அதிகரிப்பு மறுபுறம் ஆன அதிகரித்த லாப வீழ்ச்சியாலும் பொதுவான சராசரி லாப விகித வீழ்ச்சியாலுமே சரிகட்டப்படும். அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரிப்பு என்பதும் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பு என்பதும் இதுவரை அவர்களால் நுகரப்படாத அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் ஏற்ட்ட விரிவாக்கத்தினாலேயே நடக்கிறது. 

இவ்வாறாக, தொழிற்துறையின் பல்வேறு பிரிகளில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனங்களுக்கான சராசரி லாபவிகித மாற்றம் பின்வரும், பொதுவான விளைவுகளை ஏற்படுத்தம்:

.i) மூலதனமும் உழைப்பும் குறைவான ஆதாயம் தரும் துறைகளிலிருந்து அதிகம் லாபம் தரும் துறைக்கு மாற்றப்படும். இந்த மாற்றம் தொழிற்துறையின் ஒரு பிரிவில் அதிகரிக்கும் தேவை( Demand)யின் விகிதத்திறகு ஏற்ப பரிமாற்றம்( Supply)  அதிகரித்து, பிற தொழிற் பிரிவுகளில் தேவையின் குறைவுக்கு ஏற்ப பரிமாற்றம் வீழ்ச்சியடையும் வரை நடைபெறும். இதனால், பல்வேறு தொழிற்துறைப் பிரிகளிலும் பொதுவான லாபம் சமப்படும்.

.ii) பல்வேறு பண்டங்களுக்கான தேவைக்கும் அவற்றின் வரத்து அல்லது பரிமாற்றத்திற்கும் இடையிலான விகிதத்தில் ஏற்பட்ட சாதாரண ஒரு மாற்றத்தில் தொடங்கியே, அனைத்து குழப்பங்களும் உருவானதால் இக் காரணம் முடிந்ததும் விளைவுகளும் முடிந்துவிடும். விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பி சமநிலையை அடையும்.

(iii) கூலி உயர்வின் விளைவாக, லாப வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது சில தொழிற் பிரிவுகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல் தொழிற்துறை முழுமைக்கும் பொதுவானதாய் ஆகிவிடும்.

(iv) நமது அனுமானத்தின்படி, உழைப்பின் உற்பத்தி திறனிலோ, ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவிலோ மாற்றம் இல்லாதபோதும் ஒட்டுமொத்த உற்பத்தியின் வடிவம் மட்டும் மாறியிருக்கும்.

                               ( அல்லது)

சிறு பகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருளுக்காக பரிவர்த்தனை செய்யப்பட்டு, அந்த வடிவிலேயே நுகரப்படும்.

                                  ( அல்லது)

உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்குப் பதில் வெளிநாட்டு அத்தியாவசியப் பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கும்.

கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு சந்தை விலைகளின் தற்காலிகக் குழப்பத்திற்குப் பின் சரக்குகளின் விலைகளில் எவ்வித நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், லாப வீதத்தின் பொதுவான வீழ்ச்சியில்தான் போய் முடியும்.

இதேபோல், விவசாயத்திலும் கூலி உயர்வு, சரக்குகளின் விலையை உயர்த்தவில்லை. சமயத்தில் கூலி உயர்வின்போதே சரக்குகளின் குறிப்பாக, விவசாய விளைபொருட்களின் விலை முந்தைய விலையைவிட வீழ்ச்சி அடையவும் செய்கின்றன. மேலும், அவசிய வேலை நேரக் குறைப்பின் போதும்கூட (1848-ல் 10 மணி நேரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது), அது இங்கிலாந்தின் தொழிற்துறையிலும் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் நாசங்களை ஏற்படுத்தும் என வல்லுநர்களும் பொருளாதாரப் பேராசிரியர்களும் கணித்தார்கள். ஆனால், உண்மையில் வெவ்வேறான விளைவுகளே ஏற்பட்டன. குறிப்பாக, வேலைநாட்களின் நேரம் குறைக்கப்பட்ட போது ஆலைத் தொழிலாளர்களின் பணக்கூலி உயர்ந்தது; ஆலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் அதிகரித்தது; அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிந்தன; தொழிலாளர்களுடைய உழைப்பின் உற்பத்தித் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டது; அவர்கள் உற்பத்தி செய்த சரக்குகளுக்கு இதுவரை கண்டிராத அளவுக்குச் சந்தைகள் விரிவடைந்து முன்னேற்றம் கண்டன.

பின்னாளில், 1860-ல் நடைபெற்ற விஞ்ஞான மேம்பாட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டபொருளாதார அறிஞர்களும் பேராசிரியர்களும் மேற்கண்டவற்றை ஒப்புக்கொண்டதோடு, தாங்கள் கணித்தது தவறென்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஒருபடி, மேலே சென்று “மக்களின் உள்ளுணர்வே வென்ற”தென்றார்கள்.

( அரசியல் பொருளாதாரத்தின் அரிச்சுவடிகளான உற்பத்தி, கூலி, லாபம் அடங்கிய இரண்டு தலைப்புகளை மீண்டும் மீண்டும் வாசித்து, மார்க்ஸ் அவர்களின் சொற்பொழிவின் உள்ளுணர்வை கிரகித்து, தெளிவு பெற்று தொகுத்துள்ளேன்.

அடுத்தடுத்த தலைப்புகளுக்குள் போவதற்கு முன்பாக, மேற்கண்டவற்றுள் புரிதல் அவசியம் என்பதாலேயே இந்தச் சிரத்தை. தோழர்களும் இதே ஆர்வத்தையும் அக்கரையையும் பெறுவார்களாக!)

அடுத்த 2 தலைப்புகள்:

.3) கூலியும் நாணயமும்

.4) பரிமாற்றமும்(வரத்தும்) தேவையும் ................



                      .3) கூலியும் நாணயமும்


பொதுவான கூலி உயர்வின் விளைவாக, அந்தக் கூலியினைக் கொடுப்பதற்கு அதிக நாணயம் தேவைப்படும் என்று வெஸ்டன் கூறுகிறார்.

அவரது வாதம் வறட்டுத்தனமானது என்பது அவரது கூற்றுகளிலிருந்தே மெய்யாகிறது. அதாவது, முதலில், தொழிலாளியின் பணக்கூலி அதிகரித்த போதிலும் அவனுக்கு கிடைத்துவந்த சரக்குகள் நிலையான அளவுடையதாக இருந்ததால் சிக்கல்; தற்போது, சரக்குகள் ஒரே அளவுடையதாக இருந்தபோதும் அதிகரித்த பணக்கூலியால் சிக்கல்(முன்னுக்குப் பின்னாக முரண்கள்).

எவ்வாறியினும், நம் முன்னுள்ள “கூலி உயர்வும் அதன் விளைவுகளும்” என்ற ஆய்வுப் பொருளோடு இந்த நாணயச் சிக்கலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காட்ட மார்க்ஸ் விழைகிறார்.

ஐரோப்பா கண்டத்தில், வேறெந்த நாட்டையும்விட இங்கிலாந்தில் பணப்படுவாடாச் செயல்நுட்பங்கள்(Transaction Techniques) மிகப்பெருமளவு செம்மைபட்டுள்ளன. ஒரேயளவு மதிப்புத்தொகையைச் சுற்றுக்கு விடவும் அதே அளவிற்கோ அல்லது அதைவிடப் பெரும் அளவு வணிகப் பரிமாற்றத்திற்கும் மிகக் குறைந்த நாணயமே தேவைப்படுகிறது. இதற்காக, விரிவடைந்த, ஒருமுகப்படுத்தப்பட்ட வங்கி அமைப்புமுறை செயல்படுகிறது.

உதாரணமாக, கூலியை எடுத்துக்கொள்வோம். ஒரு ஆங்கிலத் தொழிலாளி அவருடைய வாரக்கூலியாகக் கடைக்காரரிடம் கொடுக்கிறார். அவரோ, வாரந்தோறும் அதை வங்கியாளருக்கு அனுப்புகிறார். வங்கியாளர் வாரந்தோறும் அதனை ஆலை அதிபருக்குத் திருப்பி அனுப்புகிறார். ஆலை அதிபரோ மறுபடியும் தம்முடைய தொழிலாளர்களுக்கு ககூலியாக வழங்குகிறார். இந்தச் சுற்று தொடர்ந்து நடக்கிறது (இந்தியாவிலும் கிட்டத்தட்ட வார, மாத ஊதிய நடைமுறைகளும் இதையே ஒத்திருப்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்).

ஒரு தொழிலாளியின் ஆண்டுக் கூலி 52 பவுன் என்று வைத்துக்கொண்டால் மேற்கண்ட ஏற்பாட்டின்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு வட்டத்தில் சுற்றிவரும் ஒற்றைச் சவரனைக் கொண்டு ஓராண்டு கூலியை வழங்கிவிட முடிகிறது. (இங்கிலாந்தின்  சில நூற்றாண்டு கால காலனியாக இருந்த இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் ஆட்சிமுறை அச்சு அசலான ஆங்கிலப் பிரதி என்பதை நாம் அவதானிப்பதுடன் மார்க்ஸ் அவர்களின் ஆய்வை ஆழ்ந்து இந்திய நாணயச் செலாவணி உதாரங்களுடனேயே அப்படியே பொருத்திப் புரிந்துகொள்வது மிகவும் நல்லதும் சிறப்பானதும் ஆகும்).

சில விவசாய மாவட்டங்களில் எங்கு “பட்டுவாடா செயல் நுட்பம்” செம்மையாக இல்லையோ அங்கு வெறுமனே ஆலைகள் மட்டுமே நிறைந்த மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவு மதிப்புகளைச் சுற்றோட்டத்தில் செலுத்த மிக அதிகமான நாணயம் தேவைப்படுகிறது. (இந்தியாவின் டிஜிட்டல் மயம் என்பது 100 நாள் கூலி முதல், மானியங்கள், நிவாரணங்கள், உதவித் தொகைகள் எனப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் நாணயச் செலாவணியை கட்டுக்குள் வைக்கவும் அதை நினைத்த வகையில் திசைவழிப்படுத்தவுமே என்பதைக் கூர்ந்து நோக்கவேண்டும்).

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐரோப்பா கண்டம் சென்றால், அங்கே பணக்ககூலியானது இங்கிலாந்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதையும் ஆனால், அதே அளவுக்கான பணக்கூலியைச் சுற்றோட்டத்தில் செலுத்த ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் இங்கிலாந்தைவிட மிக அதிகமான நாணயங்கள் தேவைப்படுகிறது. காரணம், இங்கிலாந்தைப் போலல்லாமல், செலாவணியில் ஈடுபடுத்தப்படும் அதே சவரன் தொகையை அதே வேகத்தில் வங்கியாளர் குறுக்கிட்டுப் பெறுவதோ, தொழிற்துறை முதலாளிக்கு திருப்பி அனுப்புவதோ இல்லை. இங்கெல்லாம் 25 பவுன் ஆண்டுக் கூலியைச் சுழற்சியில் விட 3 சவரன் தேவைப்படலாம். ஆனால், உண்மையில் நாம் தீர்க்கவேண்டிய பிரச்சினை இதுவல்ல என்பது நமக்குத் தெளிவாகிறது.

அன்றைய இங்லாந்தின் உழைக்கும் வர்க்கத்தின் ஆண்டு வருமானத்தை 25 கோடி பவுன் என்று மார்க்ஸ் அவர்கள் தனது மிகச் சிறந்த கணக்கீடுகளைக் கொண்டு கணிக்கிறார். இந்த பெருந்தொகையானது, 30 லட்சம் பவுன் நாணயம் மூலமாகச் சுற்றோட்டத்தில் செலுத்தப்படுகிறது. இதுவே, 50 சதவீதம் கூலிவுயர்வு ஏற்படப் போகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூடுதலாக ஒரு 15 லட்சம் பவுன் நாணயம் தேவைப்படும். மொத்தத்தில் 45 லட்சம் பவுன்கள்தான்.

தொழிலாளியின் அன்றாடச் செலவுகளில் கணிசமான பகுதி வெள்ளி, செம்பு ஆகிய நாணயங்களில்தான் நடைபெறுகிறது. சொல்லப்போனால், வெறும் அடையாள வில்லை( Token)கள் மூலமாக நடைபெறுகிறது. தங்கத்தோடு இவற்றின் ஒப்பீட்டு மதிப்பென்பது எப்போதுமே, மாற்றவியலாத(Vouchers, Bonds, இத்யாதி)காகிதப் பணத்தின் ஒப்பீட்டு மதிப்பைப்பபோல(நிர்ணயமற்ற, குத்து மதிப்பான) சட்டத்தைக்காட்டி பாரபட்சமாகத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வகையில் பார்த்தால், 50 சதவீத கூலி உயர்வுக்காக, 15 லட்சம் பவுன் கூடுதல் தேவை என்பதற்குப் பதிலாக, 10 லட்சம் பவுனே போதுமானது.

இங்கிலாந்து அரசு வங்கியில் அல்லது தனியார் வங்கியாளர்களின் நிலவறைகளில் தங்கப் பணம் அல்லது நாணயத்தின் வடிவில் தூங்கிக் கொண்டிருக்கும் 10 லட்சம் பவுன் சுழற்சிக்கு வரும். ஆனால், அந்தப் 10 லட்சம் பெறுமான கூடுதல் நாணயங்களை அச்சிடும் வகையிலோ, அவற்றின் தேய்மான, சேதார(Damaged or soiled notes) வகையிலோ ஏற்பட வேண்டிய சில்லுண்டி( Miscellaneous ) செலவுகளும்; கூடுதல் நாணயத் தேவையால் வேறுயேதுனும் சங்கடம் என்றால் அந்தச் செலவும் இதனால் தவிர்க்கப்டுகிறது.

இங்கிலாந்தின் நாணயச் செலாவணி( பணப் பறிமாற்றம்) இருபெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது( இந்திய நிலைமையும் இதுதான் ).

ஒருவகை, பல்வேறு மதிப்புகளில் வெளியிடப்படுகிற( நமது ரூபாய் நோட்டுக்களைபோல) வங்கி நோட்டுகளைக் கொண்டது. இச்செலாவணி, வணிகர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களிலும் நுகர்வோர்களிடமிருந்து வணிகர்களுக்குச் செலுத்தப்படும் பெரிய அளவிலான செலுத்துகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு வகைப்பிரிவு, சில்லறை வணிகத்தில் புழங்குகிற உலோக நாணயங்களைக் கொண்டது. முற்றிலும் வெவ்வேறானவை என்ற போதிலும் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படுகின்றன. இவ்வாறாக, பெரிய அளவிலான செலுத்துகையிலும்கூட 5 பவுனுக்கு கீழான சில்லறைத் தொகைக்கு தங்க நாணயம் மிகப்பரவலாகப் புழங்குகிறது. நாளையே, 4, 3, 2 பவுன் நோட்டுகள் வெளியிடப்படுமானால், இச்சுற்றோட்டத்தின் வழித் தடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிற தங்கம் உடனடியாக அவற்றிலிருந்து வெளியேற்றப்படும்.பணக்கூலி உயர்வின் விளைவாக, அவை எங்கு தேவைப்படுகிறதோ அந்த வழித்தடங்களில் அது பாயும். எனவே, 50 சதவீத கூலி அதிகரிப்பின் விளைவாகத் தேவைப்படும் 10 லட்சம் பவுனும் ஒற்றைச் சவரன்கூட புதிதாய் சேர்க்கப்படாமல் புழக்கத்தில் வழங்கப்பட்டுவிடும். லங்காஷயரில் (யார்க்ஷயர்-தொழில் நகரங்கள்) பல ஆண்டு காலம் புதிய வங்கி நோட்டுகள்கூட கூடுதலாக அச்சடிக்கப்படாமல் பில் மற்றும் வவுச்சர்களை சுற்றோட்டத்தில் விட்டு பரிமாற்றம் நடத்தப்பட்டதைப்போல இப்போதும் செய்யலாமென மார்க்ஸ் முன் வைக்கிறார்.

திரு. வெஸ்டன் முன்பு சொன்னதுபோல விவசாயத்தில் 100 சதவீத கூலி உயர்வானது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வெகுவாக அதிகரிக்கச் செய்யுமெனில், இந்த நிலைமையிலும் கூடுதல் நாணயம் கொள்முதல் செய்யப்படவில்லை ஆயின், நாம் நிறுவியது போலான விலை வீழ்ச்சியானது நாணயங்களைப் பெரிதும் நிலவறைகளுக்கு அப்புறப்படுத்தும் அல்லது முடங்கச் செய்யும்.

1858 முதல் 1860 வரையிலான காலம் பருத்தித் தொழிலுக்கு மிகவும் செழிப்பான காலமாகவும் அதனடிப்படையில் 1860-ஆம் ஆண்டு வணிகத்துறை வரலாற்றில் ஈடு இணையற்ற ஆண்டாகவும் அதேவேளையில் மற்றெல்லா தொழிற்கிளைகளுமே செழித்தோங்கியும் வளர்ந்தன.  பருத்தித் தொழிலாளருடையவும் அதனோடு தொடர்புடைய மற்றெல்லா தொழிலாளருடையவுமான கூலியும் 1860-ல் மற்றெல்லா ஆண்டுகளையும்விட அளவுக்கு அதிகமாக இருந்தன. அமெரிக்க நெருக்கடி வந்தது. அவர்களது மொத்த கூலியானது முன்பு அவர்கள் வாங்கியதில் 4-ல் 1 பங்காக திடீரெனக் குறைக்கப்பட்டன. இதுவே, எதிர் திசையில் கூலி உயர்வாக நிகழ்ந்திருந்தால் 300 சதவீத கூலி உயர்வாக இருந்திருக்கும். கூலியானது 5-லிருந்து 20-ஆக உயர்ந்தால்  300 சதவீதம் உயர்ந்ததாகச் சொல்கிறோம். 20-ல் இருந்து 5-ஆகக் குறைந்தால் 75 சதவீதம் வீழ்ந்ததாகக் கூறுகிறோம்.

ஆனால், ஒரு நிகழ்வில் உயர்ந்திட்ட தொகையும் அதன் எதிர் நிகழ்வில் வீழ்ந்திட்ட தொகையும் ஒரே அளவுதான். அது 15 ஷில்லிங்குகள்தான். ஆக, கூலி வீதத்தில் இதற்குமுன் எப்போதும் கண்டிராத மாற்றமாக இது இருந்தது. அதேவேளையில், பருத்தித் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை மட்டுமின்றி அத்தொழிலை மறைமுகமாகச் சார்ந்துள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் கணக்கில் கொண்டால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையானது விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைவிட அரை மடங்கு அதிகம்.

ஆனால், இந்தக் காலத்தில் கோதுமையின் விலை குறையவில்லை. 1858 முதல் 1860 வரையான 3 ஆண்டுகளில் ஒரு குவார்ட்டர் கோதுமையின் ஆண்டு சராசரி விலை 47 ஷில்லிங் 8 பென்சு. 1861 முதல் 1863 வரையிலான 3 ஆண்டுகளில் ஒரு குவார்ட்டர் கோதுமையின் ஆண்டு சராசரி விலை 55 ஷில்லிங் 10 பென்சாக உயர்ந்தது.

நாணயத்தைப் பொருத்தவரையில் நாணயச் சாலையில் (Mint – தங்கசாலை – சென்னையும்கூட) 1860-ல் 33,78,102 பவுன்கள் அச்சிடப்பட்டதற்குப் பதில் 1861-ல் 86,73,232 பவுன்கள் அச்சிடப்பட்டன.  அதாவது, 1860-ஐக் காட்டிலும் 1861-ல் 52,95,130 பவுன்கள் அதிகம் அச்சிடப்ட்டன. 1861-ல் இருந்த வங்கி நோட்டுகளின் சுழற்சி 1860-ல் இருந்ததைக் காட்டிலும் 13,19,000 பவுன் குறைவு என்பது உண்மைதான். இதை விட்டுவிட்டுப் பார்த்தாலும்கூட செழுத்தோங்கிய 1860-வுடன் ஒப்பிட்டால், 1861-ல் 39,76,130 அல்லது 40 லட்சம் பவுன் உபரி நாணயம் மிஞ்சியுள்ளது. ஆனால், இதே காலத்தில் இங்கிலாந்து வங்கியின் தங்கக் கையிறுப்பானது சரியாக அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏறத்தாழ, அதே அளவிற்கு குறைந்தது.

இன்னுமொரு கணக்கீடாக, 1862-ஆம் ஆண்டை 1842-வுடன் ஒப்பிடலாம். 1862-ல் ஒருபுறம் சுழற்சி (சுற்றோட்டம்)யில்  இருந்த சரக்குகளின் மதிப்பும் அளவும் வெகுவாக அதிகரித்தன. மறுபுறத்தில், இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இரயில்வே துறையின் பங்குகள், கடன்கள் இன்னபிறவற்றுக்கான பரிமாற்றங்களில் செலுத்தப்பட்ட மூலதனம் மட்டும் 32 கோடி பவுனை எட்டியது. 1842-ல் இதுவொரு நம்பமுடியாத தொகை. இருப்பினும், 1862-லும் 1842-லும் புழங்கிய நாணயச் செலாவணியின் மொத்த தொகைகள் ஏறத்தாழ சமமாகவே இருந்தன. ஆக, சரக்குகளின் மதிப்பு மட்டுமின்றி,  பொதுவாகப் பணப்பரிமாற்றங்களின் மதிப்பும் மிகவும் பிரம்மாண்ட அளவில் அதிகரிக்கும்போது, நாணயச் செலாவணி மேலும் மேலும் வீழ்ச்சியடைகிறது. இதை வெஸ்டன்தான் கவனிக்கத் தவறிவிட்டார்.

இந்த கூலி Vs நாணயம் என்ற பிரச்சினையைச் சற்று ஆழமாகப் பார்த்தால், கீழ்க்காணும் உண்மைகள் தெளிவாகின்றன.

கூலித்தொகை நிலையானது என்று வைத்துக்கொண்டு, அதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும்

1) சுழற்சியில் இருக்கவேண்டிய சரக்குகளின் மதிப்பும் பரிமாணமும் கணக்கு முடிக்கப்பட(பட்டுவாடாசெய்ய)வேண்டிய பணப்பரிமாற்றங்களின் அளவும் பொதுவாகத் தினமும் மாறுகின்றன;

2) வெளியிடப்படும் வங்கி நோட்டுகளின் அளவும் தினமும் மாறுகிறது;

3) பணவடிவிலான பரிமாற்றம் ஏதுமின்றி, மாற்று ஆவணங்களான உண்டிகள், காசோலைகள், பற்று-வரவுக் கணக்குகள், வங்கிப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் ஈடேறுகிற பணக் கொடுப்புகளின் தொகை தினமும் மாறுபடுகின்றது;

4) உண்மையில் தேவைப்படும் உலோக நாணயத்தைப் பொருத்தவரையில், புழக்கத்திலுள்ள நாணயத்துக்கும் வங்கி நிலவறைகளில் சேமிப்பிலிருக்கும் அல்லது அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் நாணயம், தங்கம் ஆகியவற்றுக்கும் இடையிலான விகிதம் தினமும் மாறுகின்றது;

5) தேசிய புழக்கத்தில் ஈர்த்துக்கொள்ளப்படும் தங்கத்தின் அளவும்  சர்வதேசப் புழக்கத்துக்கு அனுப்பிவைக்கப்படும் தங்கத்தின் அளவும் தினமும் மாறுபடுகின்றன.

(இவையெல்லாம் வெஸ்டனின் கண்களில் படவில்லை)

மேலும், அளவு மாறுபடாத நாணயச் செலாவணி எனும் அவரது வறட்டுக் கோட்பாடு மிகவும் பிழையானது மற்றும் அன்றாட மாற்றங்களுக்கு மாறுபட்டது.

நாணயச் செலாவணியின் விதிகளைப் பற்றிய தமது தவறான புரிதலை கூலி உயர்வுக்கு எதிராகத் திருப்புகிறார். அதற்குப் பதிலாக, இடையறாது மாறும் சூழலுக்கு ஏற்ப நாணயச் செலாவணியானது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும் விதிகளை அவர் ஆய்ந்திருக்கவேண்டும்.

¶தோழர்களே! மேதைமை மிக்க மார்க்ஸ் அவர்கள் தனது அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் மானுடத்தின்மீது கொண்ட அளவற்ற காதலாலும் வறட்டுத்தனமிக்க வெஸ்டனின் வாதங்களை மறுப்பதோடன்றி மதிப்புமிக்க புள்ளிவிபரங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்து தனது ஆய்வை நிவுகிறார். தலைப்பென்னவோ சுருக்கமாக இருந்தாலும் விபரங்களும் தர்க்கரீதியான வாதங்களும் மதிப்புமிக்வையும் சமகாலத்திற்குப் பொருந்துவனவும் ஆகும்.

மீண்டும் மீண்டும் வாசித்து, உரையாடுங்கள்                                        4) பரிமாற்றமும்(வரத்தும்) தேவையும்

திரு. வெஸ்டன் தனது இரண்டாவது உரையிலும் வரட்டுக் கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கூறுவதாகவும் ஆகவே, அந்த வரட்டுக் கோட்பாட்டை எளிமையான கருத்தியல் வடிவில் சுருக்கிச் சொல்லப்போவதாகவும் பேரறிஞர் மார்ஸ் இங்கு தொடங்குகிறார்.

வெஸ்டன் தனது வாதங்களைத் திறனாய்வற்ற முறையில் முன்வைப்பதாக, மார்க்ஸ் கூறுகிறார். அதற்கு வெஸ்டனின் ஒற்றைக் குறிப்பை முன்வைக்கிறார்.

கூலியில் ஏற்படும் உயர்வினை எதிர்த்து அல்லது அத்தகைய உயர்வினால் விளையும் அதிகக் கூலியை எதிர்த்து அவர் வாதிடுகிறார். அதிகமான கூலி என்பது என்ன? 

உதாரணமாக, வாரத்திற்கு 5 ஷில்லிங் என்பதை குறைந்த கூலியென்றும் வாரத்திற்கு 20 ஷில்லிங் என்பதை அதிக கூலியென்றும் சொல்வதேன்?

5-ஐ 20-தோடு ஒப்பிடுகையில் குறைவானது எனில், 20-ஐ 200-ரோடு ஒப்பிடுகையில் இன்னும் குறைவானதாகும். 

எனவே, கூலியையும் லாபத்தையும் பொருத்தவரையில் வெஸ்டன் அவர்கள், பொருளாதார விதிகளிலிருந்து இவற்றுக்கான அளவுகோல்களைத் தருவிக்க வேண்டும். அப்படிச் செய்யாத தவற்றோடு கூடவே, அவற்றைப் பரிசீலிக்கவேண்டிய அவசியத்தையும் அவர் உணரவில்லை. கூலிகளின் பரிமாணங்களை அளவிடக்கூடிய ஒரு திட்டமான அளவுகோளுடன் ஒப்பிட்டுதான் கூலியானது அதிகம் அல்லது குறைவு என்று சொல்லமுடியும் என்பது சொல்லாமலே விளங்கும்.

இப்போது, நம்முன்னுள்ள கேள்வி என்னவெனில், ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கூலியாகக் கொடுக்கப்படுவது ஏன்? என்பதே. இதற்கு வெஸ்டன்,  “இது பரிமாற்றம்(வரத்து) – தேவை (Supply and Demand) விதியினால் தீர்மானிக்கப்படுகிறது”. என்று கூறினால், நாம் மீண்டும் அவரிடம், “பரிமாற்றமும்(வரத்தும்) தேவையும் எந்த விதியினால் தீர்மானிக்கப்படுகின்றன” என்று கேட்டால் திணரிப்போவார். ஏனெனில், உழைப்பின் பரிமாற்றத்திற்கும் தேவைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகின்றன. அத்துடன், உழைப்பின் சந்தை விலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. உழைப்புக்கான தேவை, பரிமாற்றத்தைவிட அதிகரிக்குமெனில், கூலி உயர்கிறது. உழைப்பின் பரிமாற்றம், தேவையைக் காட்டிலும் அதிகரிக்குமெனில், கூலி குறைகிறது. என்றாலும், அத்தகைய சூழ்நிலைகளில் தேவை-பரிமாற்றம் ஆகியவற்றின் உண்மை நிலவரத்தை அறிய ஒரு வேலை நிறுத்தத்தின்போதோ அல்லது வேறு ஏதேனுமொரு, பேரிடர் போன்ற அசாதாரண வழிமுறையிலோ பரிசோதிக்க வேண்டியது அவசியமாகலாம்.ஆனால், நீங்கள் பரிவர்த்தனையையும் தேவையையும் கூலியை ஒழுங்குபடுத்தும் விதியாக ஏற்றுக்கொண்டால் கூலி உயர்வினை எதிர்த்து கூக்குரல் இடுவது எந்த அளவுக்கு பயனற்றதோ,  அந்த அளவிற்கு சிறுபிள்ளைத்தனம் ஆகும். ஏனெனில், நீங்கள் முன்வைக்கும் அந்த உச்சவிதிப்படியே பார்த்தாலும் அவ்வப்போது கூலி குறைவதைப் போலவே அவ்வப்போது கூலி உயர்வதும் அந்த அளவுக்கு அவசியமும் நியாயமும் ஆகும். 

மாறாக, பரிவர்த்தனை-தேவை விகிதத்தை கூலியை ஒழுங்குபடுத்தும் விதியாக ஏற்றுக்கொள்ளவில்லையானால், அந்த முதல் கேள்வியையேதான் திரும்ப கேட்கவேண்டியது இருக்கும்: ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கூலியாகக் கொடுக்கப்படுவது ஏன்? 

இந்த விவகாரத்தை இன்னும் விரிவாகப் பரிசீலிப்போம்:

உழைப்பின் மதிப்பு அல்லது வேறு எந்தவொரு சரக்கின் மதிப்பும் பரிவர்த்தனை-தேவை இவற்றால்தான் முடிவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று நீங்கள் கருதினால், அது முற்றிலும் தவறானது. பரிமாற்றமும் தேவையும் சந்தை விலைகளின் தற்காலிகமான ஊசலாட்டங்களை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. பரிவர்த்தனையும்-தேவையும் ஒரு சரக்கின் சந்தைவிலை அதன் மதிப்பைக் காட்டிலும் உயர்வது அல்லது குறைவது ஏன் என்பதை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால், அந்த மதிப்பையே எவ்வளவு என அவை ஒருபோதும் விளக்க முடியாது. பரிமாற்றமும்-தேவையும் ஒன்றையொன்று சமன் செய்துகொள்கின்றன அல்லது பொருளாதார அறிஞர்கள் கூறுவதுபோல் “ஒன்றையொன்று சரிகட்டிக்கொள்கின்றன” என வைத்துக்கொள்வோம். அவ்வாறு, இந்த நேரெதிரான சக்திகள் சமமான அந்தக் கணமே, அவை ஒன்றையொன்று முடக்கிப் போடுவதும் ஒரு திசையிலோ, அல்லது மறுதிசையிலோ செயல்படாமல் போவதும் ஏன்?

பரிமாற்ற(வழங்கல்)மும் தேவையும் ஒன்றையொன்று சமன் செய்துகொண்டு, அதனால், அவை செயலற்றுப்போகும் அந்தத் தருணத்தில், ஒரு சரக்கின் சந்தைவிலை அச்சரக்கின் உண்மையான மதிப்போடு அதன் திட்டவட்ட விலையோடு பொருந்திப்போகிறது. அம்மதிப்பைச் சுற்றியே சந்தைவிலைகள் ஊசலாடுகின்றன. எனவே, அந்த மதிப்பின் இயல்பைப்பற்றிய ஆய்வில் சந்தைவிலைகள் மீது பரிமாற்றமும் தேவையும் ஏற்படுத்தும் தற்காலிக விளைவுகளைப்பற்றி நாம் விவாதிக்க ஏதுமில்லை. கூலிக்கும்  மற்றெல்லாச் சரக்குகளின் விலைகளுக்கும் இது பொருந்தும்.

¶தோழர்களே! மார்க்ஸ் அவர்களின் அறிவுக் கூர்மையும் தர்க்க ஞானமுமே  மார்க்சியத்தையும் அதன் தர்க்க நெறியையும் நமக்கு வழங்குகிறது.

மார்க்சியம், நம்மைப் பொதுவானதிலிருந்து குறிப்பானதை நோக்கியும்; விபரங்களிலிருந்து உண்மையை நோக்கியும் பயணிக்கச் சொல்கிறது!)

ஆக்கம்: பால்ராஜ் ராதாகிருஷ்ணன்,       18:02:2021.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக